சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப் பட்ட சூரிய ஒளியில் மட்டுமே இயங்கத் தக்க உலகின் மிகப் பெரிய விமானம் வரும் மே அல்லதுஜூனில் வெள்ளோட்டம் காணவுள்ளது என அதைத் தயாரித்த நிறுவனம் செவ்வாய்க் கிழமை அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தினத்தில் வெள்ளோட்டத்திற்காக இவ் விமானம் மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள பயேர்னே நகரத்திலிருந்து புறப்பட்டு மத்திய தரைக் கடல் ஊடாக சுமார் 2500 Km இற்கும் அதிகமான தூரத்திற்குப் பயணம் செய்து மொரோக்கோவில் தரையிறங்க உள்ளது. கண்டங்களைக் கடந்து செல்லும் இப் பயணத்தின் போது வழியில் எங்குமே இவ் விமானம் எரிபொருளிற்காக தரையிறங்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விமானம் எந்த திகதி வெள்ளோட்டம் காணவுள்ளது என்பதைக் காலநிலையைப் பொறுத்தே தீர்மானிக்கப் படும் என அதன் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இவ்வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து இவ்விமானம் சர்வதேச விமானப் போக்குவரத்தில் 2014 முதல் பங்கு பெற்றுவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சோலார் இம்பல்ஸ் ரக விமானங்கள் எரிபொருட் தேவையின்றியும் சூழலுக்கு தீங்கின்றியும் இரவு பகல் இருவேளைகளிலும் பயணிக்கக் கூடியதாகவும் காணப்பட்டன. இவற்றின் இறக்கையின் நீளம் ஏர்பஸ் A340 போலவே 63.4 மீற்றர்களாகும். நிறை 1600 Kg மட்டுமேயாகும். மேலும் இதன் இறக்கை மேற்பகுதியில் 12 000 சூரியப் படல்கள் உள்ளன.
இவ்விமானங்கள் தமது முதலாவது சர்வதேச பயணத்தை மே 13 2011 இல் சுவிட்சர்லாந்திலிருந்து புருஸ்ஸெல்ஸ் வரையும் இதையடுத்து ஜூனில் சுவிட்சர்லாந்திலிருந்து பாரிஸ் வரையும் மேற்கொண்டிருந்தன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



