நான் தப்பு பண்ணி இருந்தால், தைரியமா மீண்டும் பரமஹம்சரைப் பார்க்கப் போயிருக்க முடியுமா? தொடர்ந்து அவரது பக்தையாக இருந்திருக்க முடியுமா? எங்க குடும்பத்துல இருக்கிறவங்கதான் அனுமதிச்சு இருப்பாங்களா?நான் வணங்கும் கடவுள் மீது ஆணையாகச் சொல்றேன்... நான் எந்தத் தப்பும் பண்ணலை. என் மடியில் கனம் இல்லை. அதனால, வழியில் எந்தப் பயமும் இல்லாமல் என் பயணத்தைத் தொடர்ந்துட்டு இருக்கேன்.''
இரு மாநிலங்களிலும் அதிர்வைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் விவகாரத்தின் சின்ன வைப்ரேஷன்கூட இல்லாமல் இயல்பாக, சாந்த மாக இருக்கிறார் ரஞ்சிதா. ''எந்தக் கேள்விக்கும் மழுப்ப லாகப் பதில் சொல்ல மாட் டேன்... என்ன கேக்கணுமோ, கேளுங்க...''
''மதுரை ஆதீனமாக நித்தியானந்தரை நியமித்து இருப்பதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?''
''292-வது குருமஹா சந்நிதானம் அருணகிரி சுவாமிகள் பல நாட்கள் யோசிச்சுதான் இப்படி ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கார். பல வருஷமா பல்வேறு ஞானிகள், மகான்கள், துறவிகள், அரசியல்வாதிகள், சட்ட ஆலோசகர்கள்னு பல தரப்பினரை அருணகிரி சுவாமிகள் சந்திச்சு இருக்கார். அதன் பிறகுதான் மதுரை ஆதீனத்தின் பொறுப்புக்கு பரமஹம்ச நித்தியானந்தரை நியமிக்கணும்னு தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருக்கார். பரமஹம்சரின் தீவிர பக்தை என்ற முறையில் சொல்கிறேன்... 'கடவுளின் பூரண அனுகிரஹத்தைப் பெற்ற பரமஹம்ச நித்தியானந்தர்தான் மதுரை ஆதீனத்துக்குச் சரியான, தகுதியான, பொருத்தமான நபர். அவரைத் தவிர வேறு யாரும் அந்த இடத்துக்குத் தகுதியானவராக இருக்க முடியாது.''
'ஆனால், நித்தியானந்தரை ஆதீனமாக நியமனம் செய்ததற்குப் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் குவிகின்றனவே?''
''இந்து மதத்தில் மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கியவர் பரமஹம்ச நித்தியானந்தர். இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ரொம்ப சின்ன வயசுலயே கோடிக்கணக்கான பக்தர்களைச் சம்பாதிச்சவர். தியான பீடத்தின் புகழை உலக அளவில் கொண்டுபோய் சேர்த்தவர். இந்து மதத்தைச் சரியான பாதையில் வழி நடத்திப்போக அவரைத் தவிர சரியான நபர் யாரும் இல்லை. அப்படிப்பட்டவரை ஆதீனமாக நியமித்ததற்குப் பெருமைப்படணுமே தவிர, எதிர்ப்புக் குரல் காட்டக் கூடாது. 'குறை குடம் கூத்தாடும்’னு ஒரு பழமொழி இருக்கே... இப்போ எதிர்ப்பு தெரிவிக்கிற எல்லாரும் குறை குடத்தைப் போன்றவங்கதான். எத்தனை எதிர்ப்பு வந்தாலும், மதுரை ஆதீனமாக எங்கள் பரமஹம்சர் பொறுப்பேற்பார். அதை யாரும் தடுக்க முடியாது.''
''நித்தியானந்தர் பற்றி நீங்க ஒரு டாக்குமென்டரி படம் எடுக்கப்போறீங்களாமே?''
''பரமஹம்சர் மக்களுக்குச் செய்யும் சேவைகள்... அவரால் குணமடைந்தவர்களின் கதைகள்னு எல்லாத்தையும் ஒருங்கிணைச்சு, ஒரு டாக்குமென்டரி ஃபிலிம் எடுக்கலாம்னு யோசிச்சது உண்மைதான். ஆனா, இப்போதைக்கு அந்த வேலையை ஆரம்பிக்கப்போறது இல்லை. இன்னும் கொஞ்ச வருஷம் போகட்டும்... பார்க்கலாம்.''
''மதுரை ஆதீனத்துக்கு நீங்கள் சென்றதற்கு ஏகமாக எதிர்ப்புகள் கிளம்பின. இனியும் மதுரை ஆதீனத்துக்குச் செல்வீர்களா?''
''மதுரை ஆதீனம் பொதுமக்களுக்காக எப்பவும் திறந்தே இருக்கும்னு மஹா சந்நிதானமும் பரமஹம்சரும் சொல்லி இருக்காங்க. அந்தப் பொதுமக்களில் நானும் ஒருத்திதானே? நான் அங்கே போறதுல எந்தத் தப்பும் இல்லையே? என்னைப் போகக் கூடாதுனு சொல்றதுக்கு, யாருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது. நிச்சயமா மதுரை ஆதீனத்துக்கு நான் போவேன்.''
''பிடதி ஆசிரமமே உங்களது கட்டுப்பாட்டில்தான் இயங்குவதாகச் சொல்கிறார்களே?''
(வாய்விட்டுச் சிரிக்கிறார்) ''நல்ல காமெடியா இருக்கே... அப்படி எல்லாமா சொல்லிட்டு இருக்காங்க? நான் எப்படிங்க ஆசிரமத்தைக் கட்டுப்படுத்த முடியும். இன்னைக்கு வரைக்கும் ஒரு சாதாரண வாலன்ட்டியராத்தான் நான் ஆசிரமத்துக்குப் போயிட்டு வந்துட்டு இருக்கேன். சுவாமிக்கு இருக்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி. அவ்வளவுதான்.''
''என்ன திடீர்னு ஜெயேந்திரர் மீது வழக்கு போட்டுட்டீங்க..?''
''என்ன வார்த்தை சொல்லி இருக்காரு பார்த்தீங்களா? அவருக்கு எதுக்குங்க இந்த வேலை? மதத் தலைவர்களுக்குள் நடக்கும் சண்டையில் என் பேரை எதுக்குத் தேவை இல்லாம இழுக்கிறாங்க? இவ ஒரு நடிகைதானே... என்ன வேணும்னாலும் கமென்ட் அடிக்கலாம்; எதுவும் பேசலாம்னு நினைக்கிறாங்கபோல. ஜெயேந்திரர் சொன்னது என் மனசை ரொம்பவே காயப்படுத்தி இருக்கு. என் அமைதியைச் சீர்குலைச்சிருக்கு. அதனாலதான் வழக்கு போட்டே ஆகணும்னு கிளம்பி வந்துட்டேன்.
என் மனசுக்கு அமைதியைத் தரக்கூடிய ஒரே விஷயம்... என் குரு, என் கடவுள் பரமஹம்சர் நித்தியானந்தரின் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டும்தான். அதை மட்டும்தான் தொடர்ந்து செஞ்சிட்டு இருக்கேன். ஜெயேந்திரர் போன்றவர்கள் கமென்ட் அடிக்கிறதால, நான் என் கடவுளைப் பார்க்காம இருக்க மாட்டேன். தொடர்ந்து நான் தியான பீடத்துக்குப் போவேன். தியான பீடத்தில் ஒரு சேவகரா தொடர்ந்து என் சேவையைச் செய்வேன். அதை யாராலும் எந்தக் காலத்திலும் தடுத்து நிறுத்த முடியாது.''
நன்றி
ஆனந்தவிகடன்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



