வடக்கைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற மனப்பாங்கு இன்னும் மாறவில்லை. நான் எட்டு வருடங்களுக்கு மேல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது பல அனுபவங்களைச் சந்தித்திருக்கின்றேன்.
மட்டக்களப்பான் மடையனென்றும் மந்திரவாதிகளென்றும்; சொல்வார்கள். நாம் அவர்கள் பக்கமிருந்தால் எம்மை நல்லவர்களென்று சொல்வார்கள். ஏதாவது அவர்களுக்கு எதிராகச் சொல்லிவிட்டால் துரோகியென்பார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையில் பிள்ளையான் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கை வடக்குடன் இணைப்பதா அல்லது இல்லையா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதைப் பற்றி வடக்குத் தலைமைகள் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு உருப்படியான தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்கப்போவதில்லை. தமிழன், தமிழீழம் என்று மக்களை உசுப்பேத்தினார்களேயொழிய, இதுவரையில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத்தரவில்லை.
இத்தனை அழிவுகளை சந்தித்த பின்னர் அவர்கள் இன்று மாகாணசபை முறைமை பற்றிப் பேசுகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மாகாணசபை பற்றி பேசுவதற்கு முன்னரே நாங்கள் மாகாணசபை பற்றி பேசினோம் என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.
இதேவேளை பிள்ளையான் தனது கழுத்திலும் கையிலும் நகைகள் அணிந்திருந்ததை பார்த்த பாவக்கொடிச்சேனை மக்கள் எங்கட நகைகளை களவெடுத்து கழுத்து நிறைய போட்டிருக்கிறான் என திட்டித்தீர்த்தனர் என நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாவக்கொடிசேனை மக்களில் பெரும்பாலானவர்கள் தாம் வெள்ளாமை செய்வதற்காக திமிலைதீவு மக்கள் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்த போது பிள்ளையான் குழு அவ்வங்கியில் பணத்தையும் பெருந்தொகையான நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர். அந்த நகைகளை பிள்ளையான் தனது கழுத்திலும் கையிலும் அணிந்திருக்கிறான் என பாவக்கொடிச்சேனை மக்கள் திட்டித்தீர்த்தனர்.
இது ஒரு இணைய செய்தி
நன்றி மனிதன்
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து



