அயன் பட்டாக மாறிய சித்திரப்பிரியா-24 மணிநேரத்தில் 1600 கி.மீ பயணம் செய்து சாதனை.


'ஐயர்ன் பட்’ சாதனையை ஆண்கள்தான் சொந்தம் கொண்டாட முடியுமா? தடைகளை உடைத்து சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரப் பிரியா. 


24 மணி நேரத்துக்குள் 1600 கி.மீ பைக் ஓட்டினால் அது 'ஐயர்ன் பட்’ சாதனையில் இடம் பெறும். சேடில்ஸோர், பேக்பர்னர் என 1500 கி.மீ-க்கு மேல் தாண்டுபவர்கள் பல பிரிவுகளில் சாதனை படைக்கலாம். அதில் 24 மணி நேரத்தில் 1600 கி.மீ-க்கு மேல் பயணம் செய்து 'சேடில்ஸோர்' சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் சித்ரப்பிரியா.


''சின்ன வயசில் இருந்தே எனக்கு த்ரில்லிங்கான விஷயங்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். அதுவும்  சீறிப் பாயும் மோட்டார் ரேஸ் என்றால் ஆர்வமாகக் கிளம்பி விடுவேன். டெல்லியில் இருந்து இமயமலை வரை பதினைந்து நாட்களில் மோட்டார் பைக்கில் 2500 கி.மீ வரை கடந்து இருக்கிறேன். முட்டி அளவிற்கு சேற்றிலும், பொங்கி ஓடுகிற ஆற்றிலும்கூட பைக்கில் பயணம் போயிருக்கிறேன். முழு தேசத்தையும் நாற்பத்தைந்து நாட்களில் சுற்றி வந்து இருக்கிறேன்!'' என்று தனக்கு இன்ட்ரோ கொடுத்துக் கொண்டவர், 'ஐயர்ன் பட்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.


''ஐயர்ன் பட்டில் 'சேடில்ஸோர்’ பிரிவில்  இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் ஆயிரத்து அறுநூறு கிலோ மீட்டரைக் கடக்க வேண்டும். சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது போன்ற விஷயங்களுக்குச் செலவிடும் நேரமும் இந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம். இதுவரை இந்தியாவில் இந்த சேடில்ஸோர் பிரிவில் ஆண்கள் மட்டுமே சாதனை படைத்திருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையே சுமார் ஐம்பதுதான் இருக்கும். ஆசியாவிலேயே பெண்கள் யாரும் இந்த இலக்கை அடையவில்லை. இதில் முயற்சித்து பல பேர் தோற்றுப் போய் இருக்கிறார்கள். இந்த சாதனையை என்னால் நிச்சயம் படைக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் பிளான் போட்டேன்.


முதலில், சென்னை - விசாகப்பட்டினம் பாதையைத் தேர்வு செய்தேன். ஆனால், இந்தச் சாலை எப்படி இருக்கிறது எனப் பார்க்கச் சென்றபோதுதான், கிட்டத்தட்ட இருபது டைவர்சன்ஸ் இருப்பது தெரிந்தது. அது மட்டுமல்லாமல், ஆறு வழிச் சாலையாக அந்தச் சாலை மாற்றப்பட்டுக் கொண்டு இருந்தது. இதனால், பெங்களூரு - புனே நெடுஞ்சாலையைத் தேர்ந்தெடுத்தேன். இவை இரண்டுக்கும் இடையில் 800 கி.மீ தூரம் போய்த் திரும்பினால், இலக்கைத் தொட்டதாகி விடும்.






இதுதான் பாதை... இதுதான் பயணம் என்று முடிவு செய்தவுடன், அதற்கான ஆயத்தப் பணிகளைத் துவங்கினேன்.  ஆறு மாதங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தேன். எடுத்துப் போகிற பொருட்களை முடிந்தவரை எடை குறைவானதாகத் தேர்வு செய்து கொண்டேன். குடிக்க இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில், பத்து எனர்ஜி பார்கள், கொஞ்சம் சாக்லேட், நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொண்டேன். ஹோண்டா நிறுவனம் சிபிஆர் 250 ஆர் பைக்கை இந்தச் சாதனைக்காக எனக்குக் கொடுத்தது. மொபைல், ஜி.பி.எஸ், கேமரா ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டேன். கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று, காலை ஆறரை மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பினேன்.


இரண்டரை மணி நேரம் ஓயாமல் பைக்கை விரட்டி ஹூப்ளியை ஒன்பது மணிக்கு அடைந்தேன். அங்கே கொஞ்சம் தண்ணீர், இரண்டு எனர்ஜி பாரைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தேன். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் பில்லைப் பெற்றுக் கொள்வதில் கவனமாக இருந்தேன். இப்படியே பைக் ஓட்டி மதிய உணவைப் புறக்கணித்து, மாலை ஆறரை மணிக்கெல்லாம் புனே போய் சேர்ந்து இருந்தேன்.






புனேவில் மாலை நேரம் என்பதால், ஏகப்பட்ட டிராஃபிக் ஜாம். அதனால், இரண்டு மணி நேரம் அங்கே வீணாகிவிட்டது. திரும்பவும் பெங்களூருவை நோக்கிப் பயணம்.  டிராஃபிக்கால் நேரம் வீணானது போதாது என்று, வழி தவறி ஒரு பெரிய மலைப் பாதையில் சிக்கிக் கொண்டேன். அங்கே இருந்து சரியான பாதைக்குத் திரும்ப 20 நிமிடங்களை இழந்தேன். பனிக்காலம் என்பதால் குளிரால் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன.  கண்ணில் பூச்சிகள் அடித்து கண்ணைச் சிவக்க வைத்துவிட்டன. நடுவில் ஒரு நான்கு மணி நேரம் யாருமே இல்லாமல், இருட்டுப் பாதையில்... இரவில் ஒற்றைப் பெண்ணாகப் பயணம் செய்வது திகிலையும், த்ரில்லையும் கிளப்பியது.


ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் பைக்கை ஓட்டினேன். இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க சந்தோஷத்தில் நெஞ்சடைக்க ஆரம்பித்தது.


இருபத்தி மூன்று மணி நேரத்தில் பெங்களூரு நகரத்தை அடைந்தேன். ஆனால், நான் பெங்களூருவை குறிப்பிட்ட நேரத்துக்குள் அடைந்தேன் என்பதற்கு ஆதாரமே, பெட்ரோல் பங்க்கில் கொடுக்கப்படும் பில்தான்.


ஆனால், முந்தைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால்,  பல பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் இல்லை. அடுத்த பங்க்கிலும் அதே நிலைமை. இன்னொரு பங்க்கில் கையால்தான் பில் எழுதித் தருவார்கள். இருபது நிமிடங்கள் முழுதாக ஓடி இருந்தது. கைக்கெட்டும் தூரத்தில் இருந்த வெற்றி கை மீறிப் போவதாகப் பட்டதும், கண்கள் கலங்கி விட்டன.


இருபது கி.மீ தொலைவில் வேறு ஒரு பங்க்கைக் கண்டுபிடித்து, அங்கே போய்ச் சேர்ந்ததும் மணியைப் பார்த்தேன். இருபத்தி மூன்று மணி நேரம் நாற்பது நிமிடங்களில் பயண இலக்கை அடைந்து இருந்தேன். ஆசியாவிலேயே இந்தச் சாதனையைச் செய்த முதல் பெண் நான்தான் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. பெண்களால் இயலாத காரியம் எதுவும் இல்லை என்பதை நம்புபவள் நான். லிம்காவும் இந்தச் சாதனையை அங்கீகரித்து உள்ளது.


பிடித்ததைச் செய்வதில்தானே த்ரில் இருக்கிறது?'' என கம்பீரமாக முடிக்கிறார் சித்ரப்பிரியா!

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
 
© 2012 I tamil Veb All Rights Reserved. | Published by :- I tamil Veb